டிச.3.
பதிவுத்துறையை சார்ந்து பணி புரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியம் துவக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதனை துவக்கி வைத்தார். இந்த நிதியத்தில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களை சார்ந்து தொழில் பிரிந்து வரும் ஆவண எழுத்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆவண எழுத்தர்களின் நல நிதியம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி பதிவு துறையால் அரசாணை வெளியிடப்பட்டும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நலநிதியத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு மாநிலக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் ஆவண எழுத்தர்களின் நல நிதியம் 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வகையில் உதவித்தொகை தற்போதைய பண மதிப்பீட்டின்படி மிக குறைவாக உள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு ஆவண எழுத்தர்களின் நல நிதியம் நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் ஆவண எழுத்தர்களின் நல நிதிய சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி ஆவண எழுத்தர் உரிமம் பெற்ற 5188 பேரிடம் நல நிதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினராக சேர ஒரு முறை செலுத்தும் சந்தாவாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.
மேலும் பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் ஆவணம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.10 வீதம் நல நிதியத்திற்காக வசூல் செய்யப்படும். இதிலிருந்து திட்டங்களுக்கான செலவு ஈடு செய்யப்படும். ஆவண எழுத்தர்களின் நல நிதிய உறுப்பினர்களுக்கு விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனத்திற்கு உதவி தொகையாக ரூ.1லட்சம், இயற்கை மரணம் மற்றும் உடல் ஊனங்களுக்கு உதவி தொகையாக ரூ. 20000 மாதாந்திர ஓய்வுதியம், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இறுதிச்சடங்கு நிதி, மூக்கு கண்ணாடி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
பதிவுத்துறை தலைவர் தலைவராகவும் இதர பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் ஆவண எழுத்தர் சங்கத்திலிருந்து நியமனம் செய்யப்படும் நான்கு நபர்கள் உறுப்பினர்களாக கொண்ட ஒரு குழு நிதியத்தை நிர்வகிக்கும். ஆவண எழுத்தர்களின் நல நிதியம் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர். ஜோதி நிர்மலா சாமி பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.