மே.2.
தர்பூசணி பழங்களில் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் தர்பூசணி பழப்பயிர் 70.642 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தர்பூசணி பழப்பயிர் மகசூல் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 மெட்ரிக் டன் வீதம் சுமார் 5.56.221 மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது.பொதுவாக தர்பூசணி டிசம்பர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்பட்டு கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு வரும். வெயில் காலங்களில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணும் இப்பழம். கடந்த சில தினங்களாக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியில் தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக பரவிய உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் முதலிய உயர் அதிகாரிகள் மாவட்ட அளவிலான தோட்டக்கலை துறை அதிகாரிகளை உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு அதன் உண்மை நிலையை தெரிவிக்க உத்தரவிட்டனர். இதன்படி, தோட்டக்கலை துணை இயக்குநர்கள் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறையுடன் இணைந்து இரசாயன ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை இரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. மேலும், நம் உடலின் நீர்ச்சத்தின்மையைப் போக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ. சி. பி1. பி6 போன்ற நுண்ணூட்ட சத்துக்களும் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகளவில் உள்ளதால் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு சுக்ரோஸ் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் எவ்வித தயக்கமுமின்றி உட்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் உண்ணத்தூண்டும் ஒரு உன்னதப்பழமாகும்தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போல் தர்பூசணி பழத்திலும் இயற்கையாவே லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதன் காரணமாகவே சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும், மஞ்சள் நிற தர்பூசணி பழத்திற்கு பீட்டா கரோட்டீன் எனப்படும் சுரபி காரணம் ஆகும். இதை கேரட்.. சக்கரைவள்ளி கிழங்கு. குடைமிளகாய் போன்ற காய்கறிகளிலும் காணலாம். இந்த லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டீன் நமது கண்பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண்புரை நோயிலிருந்து பாதுகாக்கிறது. இந்த விவரங்கள் பத்திரிக்கைச்செய்தி வாயிலாகவும், தொலைகாட்சி மூலமாகவும், இணையதள ஊடகங்கள் மற்றும் வாட்சாப் குறுஞ்செய்தி மூலமாகவும் பொதுமக்களிடையே தோட்டக்கலை துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊடகத்தில் பரப்பிய தவறான வதந்திகளை நம்பாமல் பொதுமக்கள் அனைவரும் உண்டு பயனடையும்படி தோட்டக்கலை துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் மூலம், விவசாயிகள் தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்கப்பெற்று பயன்பெறுவதோடு, பொதுமக்களின் குறிப்பாக முதியவர்களின் உடல் நலமும் பேணிப் பாதுகாக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.