பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் ஆகஸ்ட் 6-ம் தேதி புதன்கிழமை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்தியாவின் வினேஷ் போகட்.
வியாழக்கிழமை தங்கப் பதக்கத்துக்கான போட்டிக்கு முன் நடந்த எடைப் பரிசோதனையில் 50 கிலோவுக்கு மேல் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இப்படி தகுதி நீக்கம் செய்யப்படுகிறவர்கள் போட்டித் தரவரிசையின் கடைசி இடத்தில் வைக்கப்படுவார்கள். இதனால், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதால் அவருக்கு கிடைக்க வாய்ப்பிருந்த வெள்ளிப் பதக்கமும் பறிபோனது.
ஒவ்வோர் எடைப்பிரிவுக்குமான ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகள் இரண்டு நாள்களில் நடத்தி முடிக்கப்படும். இந்த இரண்டு நாளின் தொடக்கத்திலும் போட்டியாளர்களுக்கு எடைப் பரிசோதனை செய்யப்படும்.
இதில் எந்த ஒரு நாளில் அவர்களது எடை கூடுதலாக இருந்தாலும் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிறது ஒலிம்பிக் தளத்தில் வெளியான ஒரு கட்டுரை.
வினேஷ் போகட்டின் எடை 50 கிலோவுக்கு மேல் சென்று அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது எப்படி என்று விவரித்துள்ளார் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் தின்ஷா பர்திவாலா. அதுவும் ஒலிம்பிக் தளத்தில் வெளியாகியுள்ளது.
அந்த விளக்கத்தின் மொழியாக்கம்:
மல்யுத்த வீரர்கள் வழக்கமாக தங்கள் இயல்பான எடையைவிட குறைந்த எடைப்பிரிவிலேயே போட்டியிடுவார்கள். தங்களைவிட வலுக்குறைந்த வீரர்களுடன் மோதும் சாதகம் இதில் உண்டு.
போட்டியன்று காலை எடைபோடும் நேரம் வரை, உணவு, தண்ணீர் ஆகியவற்றை கணக்காக உட்கொள்வது, உடற்பயிற்சி, நீராவிக்குளியல் ஆகியவற்றின் மூலமாக உடலை வேர்க்கச் செய்வது போன்றவை இந்த எடை குறைப்பு நடவடிக்கையில் இடம் பெறும்.
இதனால் ஏற்படும் உடல் பலவீனம், ஆற்றல் வீழ்ச்சி ஆகியவை போட்டியில் பங்கேற்பதற்குப் பாதகமானவை. எனவே, எடைப் பரிசோதனைக்குப் பிறகு, போட்டியாளருக்கு கொஞ்சம் தண்ணீர், உயர் ஆற்றல் தரும் உணவுகள் தரப்படும்.
இவை உடல் எடையில் 1.5 கிலோ கூட்டும் என்று வினேஷின் ஊட்டச்சத்து வல்லுநர் கணக்கிட்டார். சில நேரங்களில் போட்டிக்குப் பிறகு எடை மீண்டும் உயரும். வினேஷுக்கு 3 போட்டிகள் இருந்ததால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க சிறிது சிறிதாக தண்ணீர் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.
அவருக்கு பங்கேற்புக்குப் பிந்தைய உடல் எடை அதிகரிப்பு நிகழ்ந்தது. வழக்கமாக எடை குறைப்பதற்கு வினேஷிடம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அவரது பயிற்சியாளர் தொடங்கினார். அது பலன் தந்திருக்கும் என்று அவர் நம்பினார். ஆனால், அவரது 50 கிலோ எடைப் பிரிவில் அவரது எடை 100 கிராம் அதிகமாக இருந்தது. எனவே அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
முடி வெட்டுவது உள்ளிட்ட எல்லா தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவருக்கு அனுமதிக்கப்பட்ட 50 கிலோவுக்கு கீழே அவரது எடை செல்லவில்லை, என்று தெரிவித்துள்ளார் தின்ஷா பர்திவாலா
இதில் நமக்கு எழும் கேள்விகள்:
1)இரண்டு நாள்கள் நடக்கும் மல்யுத்தப் போட்டியில் முதல் நாளில் மூன்று போட்டி என்பது அரையிறுதிவரை வந்த எல்லா வீரர்களுக்கும் நடப்பதுதான். எனவே, அவர்களது தண்ணீர் தேவையும் ஒன்றுபோலவே இருக்கும். மற்ற வீரர்களும் வினேஷைப் போலவே குறைந்த எடைப்பிரிவுக்கு வந்து எடைக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பே அதிகம். அப்படி இருக்கும்போது வினேஷுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும்?
*எப்போதும் வினேஷிடம் நடைமுறைப்படுத்தும் எடைகுறைப்பு நடவடிக்கைகள் நேற்றுமட்டும் பலன் தராமல் போனது எப்படி?.
*அந்த நடவடிக்கைகள் பலன் தந்திருக்கும் என்று நம்பினார் என்றால், அதிகாரபூர்வ எடைப் பரிசோதனைக்கு செல்லும் முன்பு அணியில் எடையை சரிபார்க்கவில்லையா?. முதல் நாள் எடை சோதனைக்குப் பிறகு வினேஷுக்குத் தரப்பட்ட உணவு, தண்ணீர் ஆகியவை 1.5 கிலோ எடையை அதிகரிக்கும் என்று அவரது ஊட்டச்சத்து வல்லுநர் கணக்கிட்டதாக தின்ஷா கூறுகிறார். பிபிசி ஆங்கிலச் செய்தியில் 2 கிலோவரை எடை அதிகரித்துவிட்டதாக தகவல் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை உடல் எடை அதிகரித்து, அது மீண்டும் கீழே இறங்காத அளவுக்கு அவருக்குத் தரப்பட்ட உணவு என்ன?
வெறும் தண்ணீரால் அந்த எடை அதிகரித்திருந்தால், சிறு நீர், வியர்வை போன்றவற்றால் எடை மீண்டும் குறைவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? அதுவும் அதற்கான முறைப்படியான உடற்பயிற்சி, நீராவிக் குளியல், முடி வெட்டுதல் ஆகிய நடவடிக்கைகளுக்குப் பிறகும்?
*ஒருவேளை எடை குறையாத நிலை இருந்திருந்தால் வினேஷ் போட்டியில் இருந்து விலகியிருக்க வாய்ப்பு இருந்ததா? அப்படி செய்திருந்தால் வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்குமே.
இந்த அறிக்கையில் பல இடங்களில் மழுப்பல் தெரிகிறது. இது தொடர்பான விரிவான விசாரணை தேவை. மல்யுத்த வீரர்களிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாஜக எம்.பி. பிரஜ்பூஷனுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர் வினேஷ் என்ற கோணத்தை இதில் புறக்கணிக்க முடியுமா?
AD.bala