ஜூலை.17.
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் 40 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார். கேரள மாநிலம் திருச்சூரில் அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நேற்று கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். தம்பி சேகருடன் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் விஜயபாஸ்கர் கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கரூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவரை நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிரித்விராஜ் பத்திரம் காணாமல் போனதாக கூறியதும் உடனே வழக்கு பதிவு செய்து மேலும் கண்டு பிடிக்க முடியவில்லை என சான்றிதழும் கொடுத்துள்ளார். சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த ஆட்சியின் போது இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.