டிச.31.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (30.12.2024) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, விவேகானந்தர் பாறைக்கு இப்பாலத்தின் வழியாக நடந்து சென்று பார்வையிட்டார். இவ்விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருமதி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ் அலங்காரத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கும், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் பாதங்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம்
கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை அமைப்பதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக 37 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி பெறப்பட்டு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் நிதிப் பணியாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
இப்பாலக் கட்டுமான வடிவமைப்பு சென்னை-இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கடல்சார் பொறியியல் பிரிவின் ஒப்புதலையும், கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.
இப்பாலமானது 77 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலம் கொண்ட Bowstring Arch பாலமாகும். இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டுள்ளது. முழுமையாக பொருத்தப்பட்ட எக்கு அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு, நெட்வொர்க் ஆர்ச் முழுமையாக பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இப்பாலத்தில் 2.5 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை மேல்தள காங்கிரீட், கிரானைட் கற்கள் மற்றும் ஒளிரூட்டும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர்கள் முனைவர் ம.சக்கரவர்த்தி, தென்மொழி நற்றேவன், புலவர் அய்யா மோகன், திருக்குறள் சுப்பராயன், தமிழரிமா தா.சம்பத், பாவலர் மேத்தாவாணன், சி.பன்னீர்செல்வம், முனைவர் க.வளனரசு. முனைவர் பேர. கஸ்தூரி ராஜா, திருக்குறள் தூயர் அ.கோபிசிங், கைலாசம், திருக்குறள் செல்வன், புலவர் செந்தலை ந.கவுதமன், பெரும்புலவர் மு.படிக்கராமு, முனைவர் கலை. செழியன், மு.கவினரசு, முனைவர் மா.பூங்குன்றன், திருக்குறள் க.கோ.பழனி, கோ.பிச்சை வள்ளிநாயகம், திருக்குறள் புலவர் நாவை. சிவம், சி. சொல்லரசு, இரா. கழராம்பன் ஆகிய 22 தகைமையாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
பூம்புகார் விற்பனையகம்
கன்னியாகுமரி, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் விற்பனையகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். அவ்விற்பனையகத்தில், பித்தளை, வெண்கலம், பைபர், தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் கலை தட்டுகள், கண்ணாடி ஓவியம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட வடிவிலான (மினிஆக்ச்சர்) அய்யன் திருவள்ளுவர் சிலைகள், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் திருக்குறள் புத்தகங்கள் போன்றவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்களால் அய்யன் திருவள்ளுவர் மணல் சிற்பத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
பின்னர், முதலமைச்சர் படகு குழாமிலிருந்து அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையில் அமைக்கப்பட்டுள்ள சீரொளிக் (லேசர்) காட்சியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் தலைமையில் “திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே – சமுதாயத்திற்கே” எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றத்தை பார்வையிட்டார்.
இவ்விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், திருமதி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, கனிமொழி கருணாநிதி, ஆ.ராசா உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.