மே.2.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம். நெரூர் பகுதியில் வேளாண்மை துறையின் சார்பில் கோடை பயிர் சாகுபடி விவரங்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணியிணை மாவட்ட கலெக்டர் தங்கவேல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின்னர் கலெக்டர் கூறியது-
வேளாண் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விவரங்கள் அடங்கிய அனைத்து தரவுகளையும் உள்ளடக்கிய தரவு அடுக்கு உருவாக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் இவ்வித வேளாண் அடுக்கக பணி வேளாண்மை. தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கான புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இச்செயலியினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய வேளாண் தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து பயன்பெறலாம். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் முறையாக விவசாயிகளுக்கு விரைவில் சென்றடைவதை உறுதி செய்யும்பொருட்டு இவ்வேளாண் அடுக்ககம் திட்டம் அரசால் மேற்கொள்ளப்படவுள்ளது.
மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு என தனித்துவமான அடையாள எண் வழங்கப்படவுள்ளது. மேற்படி தரவு பதிவேற்றம் விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்படும். இனி வருங்காலங்களில் அரசின் அனைத்து திட்டப்பலன்களும் விவசாயிகளின் தரவு தளம் மூலமாகவே வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த வேளாண் தரவுதளத்தின் மூலம் அனைத்துதுறை பயன்களை ஒன்றை சாளர முறையில் பெறலாம். குறிப்பாக ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இதன்அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்.
விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணபரிமாற்றம் செய்யப்படும். நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் மூலம் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெறும் வசதி விவசாயிகள் இதுவரை அரசிடமிருந்து பெற்ற நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். இனிவரும் காலங்களில் PMKISAN, PMFBY PMFBY (பயிர்காப்பீடு) போன்ற அரசின் திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயி சார்ந்த திட்ட பலன்கள் வழங்கும் அனைத்து அரசு துறைகளுக்கும் இத்தரவுகள் வழங்கப்பட்டு, இதன் அடிப்படையிலேயே திட்ட பயன்கள் வழங்கப்படும். இந்த ஒருங்கிணைந்த தரவு தளத்தின் பதிவுகள் படி 24 துறைகளின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம். இத்தரவு உள்ளீடு செய்வது தொடர்பான பணிகள் வருவாய் கிராமங்கள் வாரியாக அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த வகையில், அக்ரிஸ்டாக் இணையத்தின் வாயிலாக உழவர் நலன் சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டப் பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு ஏதுவாக விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புவியிடக் குறியீடு செய்யப்பட்ட புல எண்ணில் சாகுபடி செய்துள்ள பயிர் பரப்பு விவரங்களை நிகழ்நிலை அடிப்படையில் பதிவு செய்திட Crop Survey toன்கிற செயலி மூலம் மின்னணு கோடை பயிர் சாகுபடி அளவிட்டு பணியை வேளாண்மை உழவர் நலத்துறை களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ள அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 200 வருவாய் கிராமங்களில் உள்ள 6,06,869 உட்பிரிவுகளில் கோடை பயிர் சாகுபடி விவரங்களை டிஜிட்டல் முறையில் கணக்கிடும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பணி கடந்த மாதம் 28 ம் தேதி முதல் DCS-Digital Crop Survey இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் பணி அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதுவரை 2,11,469 உட்பிரிவுகளில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் அனைவரும் இந்த ஒருங்கிணைந்த வேளாண் தரவு உள்ளீட்டு பணியினை மேற்கொண்டு விவசாயிகள் அடையாள எண் பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பான விவரங்கள் மற்றும் சேவைகளை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சிவானந்தம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் தியாகராஜன். முசிறி எம்.ஐடி வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள் உடனிருந்தனர்.