ஆக.2.
கரூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நிலநிர்வாக ஆணையருமான டாக்டர் பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார். கிருஷ்ணராயபுரம் தாலுகா மாயனூரில் காவிரி ஆற்றில் அதிக உபரி நீர் வந்துகொண்டிருக்கிறது. வருவாய்த்துறை, காவல் துறை. தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று, காவிரி கரையோரப் பகுதிகளான தவிட்டுப்பாளையம் மற்றும் மாயனூர் கதவணை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, புகழுர் வட்டம். தவுட்டுப்பாளையம். கூலக்கவுண்டனுரில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பாக மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ. 51.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய தொடக்கப்பள்ளி கட்டுமானப்பணிகளையும் மற்றும் புகழுர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையையும் என மொத்தம் ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், வருவாய் கோட்டாட்சியர்கள். தனலெட்சுமி, முகமது பைசல், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோபிகிருஷ்ணா. நகராட்சி ஆணையர்கள் நந்தகுமார் (குளித்தலை), ஹேமலதா (புகழுர்) உடனிருந்தனர்.