டிச.30.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2023 அன்று இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில் கீழ்க் காணும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்வதாக கரூர் மாவட்ட எஸ்.பி முனைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
31.12.2023 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் சுமார் 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தி யாரும் வாகனம் ஓட்டக்கூடாது மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லவோ, சாகசம் செய்யவோ கூடாது, மீறினால் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகளில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சியின் போது அதன் ஏற்பாட்டாளர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் புத்தாண்டை அசம்பாவிதம் இல்லாத விபத்து, இல்லாத புத்தாண்டாக கொண்டாட மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட எஸ்.பி. முனைவர் தக்ஷபிரபாகர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.