ஏப்.19.
கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி குமாரபாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்வது மற்றும் இலவச சட்ட ஆலோசனை உதவிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் .மீ. தங்கவேல், மாவட்ட முதன்மை நீதிபதி R. சண்முகசுந்தரம் தலைமையில் வகித்தனர்.
கலெக்டர் பேசுகையில்,
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் பசுமை பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளில் 23.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் இதுவரை சுமார் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வனத்துறையின் சார்பாக 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அதை பொதுமக்கள் பெற்று நடவு செய்து பராமரிக்க முன்வர வேண்டும். கடந்த முறை மாவட்ட முழுவதும் 2.25 இலட்சம் பனை விதைகள் சேகரித்து நடவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மண் பகுதிகள் குறைந்து பாறை பகுதிகள் அதிகமாக உள்ளதால் வெப்பம் அதிகரித்துள்ளது. அதிக மரக்கன்றுகள் நடவு செய்வதன் மூலமே அதிக அளவு ஆக்சிஜன் பெற்று வெப்பத்தை குறைக்க முடியும். அனைவரும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க முன்வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி R.சண்முகசுந்தரம் பேசுகையில்,
நீதிமன்றத்தை தேடி மக்கள் வந்த காலம் போய் நீதித்துறை மக்களை தேடி செல்லும் காலம் வந்துள்ளது. உயர்நீதி மன்றம், அதிக அளவில் மரக்கன்றுகள் நடவு செய்து அதை தொடர்ந்து சட்டப் பணிகள் ஆணை குழுவினர் மூலம் கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மரக்கன்றுகள் கரூர் மாவட்டம் முழுவதும் நடவு செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து நீதித்துறை செயல்படுகிறது. மரக்கன்றுகளை நடவு செய்வது மட்டும் அல்லாமல் அதற்கென்று தனியே குழு அமைத்து அதன் பராமரிப்பு பணிகளையும் கண்காணித்திட திட்டமிட்டபட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து நமக்கு கிடைத்த இந்த இயற்கை வளங்களை பாதுகாத்து நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கும் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும் என்றார்.
பல்வேறு தலைப்புகளில் அதிகாரிகள் கருத்துரையாற்றினர்.
பின்னர் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருமளவில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நடுவர் ஜெயா பிரகாஷ் அவர்கள் வரவேற்புரையாற்ற, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலர் மற்றும் சார்பு நீதிபதி தனஅனுராதா நன்றியுரை கூறினார். கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட வன அலுவர் சண்முகம், கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.சுதா, தேசிய சட்டப் பணிகள் ஆணை குழுவின் ஆலோசகர் வழக்கறிஞர் சரண்பாஸ்கர், வழக்கறிஞர்கள் பாலாஜி காந்தி, ஆனந்தி ஆகியோர் பேசினர். வழக்கறிஞர் நகுல்சாமி மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.