ஜன.9.
கரூர் மாநகராட்சி அருகம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஆச்சிமங்கலம் நியாய விலை கடையில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா முன்னிலை வகித்தார்.
தமிழக மக்கள் அனைவரும் 2025 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு, அதன்படி சென்னையில் இன்று தொடங்கிவைத்தார்.
கரூர் மாவட்டத்தில் 333076 குடும்ப அட்டைதாரர்களுக்கு 408 முழு நேர நியாய விலை கடைகள், 229 பகுதிநேர நியாய விலை கடைகள் மற்றும் இரண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என மொத்தம் 637 நியாய விலை கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது இன்று முதல் வழங்கப்படுகிறது. டோக்கன் நம்பர் மற்றும் குறிப்பிட்ட தேதியில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன்.கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் மரு.சுரேஷ். மாநகராட்சி ஆணையர் சுதா, மாநகராட்சி மண்டல குழு தலைவர் கனகராஜ், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் ஆறுமுகம். அருள்மொழி. பிச்சைவேலு. வட்டாட்சியர் குமரேசன், விஜயகுமார். மோகன்ராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.