ஜூன்.8.
“கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” -என காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளையும் உடனடியாக விசாரித்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி புகார்கள் அதிகம் எழுந்து வருகின்றன. வட்டி கட்ட முடியாத நிலையில் இருப்பவர்களைஅடித்து சித்திரவதை செய்வது, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்யவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது டிஜிபி உத்தரவை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள கந்துவட்டி புகார்கள் தொடர்பான வழக்குகளை போலீசார் தூசிதட்டி வருகின்றனர். கடந்த ஆட்சியின் போது எஸ்பி விக்ரமன் கந்துவட்டி பிரச்சினையில் கடும் நடவடிக்கை மேற்கொண்டார். எஸ்பி எச்சரிக்கையையும் கேட்காமல் கந்துவட்டி பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனையடுத்து அவர்களுக்காக தனி கூட்டம் ஒன்றை நடத்தி எச்சரிக்கை விடுத்தார் . மேலும் கந்து வட்டி புகார்களில் தொடர்ந்து சிக்குபவர்கள் பட்டியல் தயாரித்து போலீசார் வெளியிட்டனர். இதனையடுத்து எஸ்பி விக்ரமன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.