செப்.3.
ஜவுளி தொழில், கொசு வலை, வாகனங்களுக்கு கூண்டு கட்டுதல் உள்ளிட்ட தொழில்கள் நிறைந்த கரூர் மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஒரே பேருந்து நிலையத்தில் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர் . பேருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மட்டுமின்றி வேலைக்காக மட்டுமே தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். கரூர் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையம் 1987 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது 35 ஆண்டுகளாக ஒரே பேருந்து நிலையத்தில் பயணிகள் நெரிசலை அனுபவித்து வருகின்றனர் . 1995ஆம் ஆண்டு கரூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், என படிப்படியாக அனைத்து துறை அலுவலகங்களும் திறக்கப்பட்டன. எனினும் பேருந்து நிலையம் மாற்றப்படவில்லை. 1996 ஆம் ஆண்டு முதல் கரூர் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வந்தது. 26ஆண்டுகளாகியும் இது கோரிக்கையாகவே இருந்தது.
பஸ் ஸ்டாண்டின் கதை
முத்துக்குமாரசாமி பேருந்து நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்பு தற்போதைய கரூர் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் சிறிய அளவில் கரூர் பேருந்து நிலையம் இருந்தது. அதன்பிறகு தற்போது உழவர் சந்தை இருக்கும் இடத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டது.
கரூரில் தற்போதைய பேருந்து நிலையம் ஆனது ஏ கிரேடு என அழைக்கப்பட்டாலும் போதுமான பேருந்துகளை நிறுத்த முடியாத நிலையிலும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் தான் உள்ளது. 70 பேருந்துகள் வரை நிறுத்தமுடியும். ஆனால், தினமும் ட்ரிப் அடிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை 1,000-க்கும் அதிகம்.
சுக்காலியூர் ,தோரணகல் பட்டி, ஆட்சி மங்கலம், என மாற்றி மாற்றி இடங்களை அறிவிக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலையம் அமைந்தபாடில்லை. ஏதாவது ஒரு இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை கொண்டு வாங்கப்பா தாங்க முடியல என்ற நிலை ஏற்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட் அங்கே வருகிறது இங்கே வருகிறது என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் கரூரில் புதிய பேருந்து நிலையம் திருமாளிகை டூரில் அமைக்கப்பட இருக்கிறது. ஜூலை2 ம்தேதி கரூரில் நடைபெற்ற அரசு அளவில் பங்கேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு அடிக்கல் நாட்டினார். இதை அடுத்து பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
இன்று கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணி துவக்க விழா நடைபெற்றது. ரூ. 40 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள விரிவாக்கபட்ட புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் மாணிக்கம், மொஞ்சனூர் இளங்கோ, சிவகாமசுந்தரி0மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.