ஆக.6.
கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு உபரி நீர் வந்ததால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் அமராவதி ஆற்றில் வரும் உபரி நீரும் காவிரியில் கலக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று கரூர் மாவட்டம் திம்மாச்சிபுரத்தில் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். மாயனூர் காவிரி கதவணையில் நீர் வரத்து குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் மாணிக்கம் சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.