ஏப்.27.
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்டகலெக்டர் தங்கவேல் தலைமையில் கரூர் மாவட்டத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக உட்கட்டமைப்பு பணிகளுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். அந்த வகையில் கரூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவுத்திட்டமான திருச்சிராப்பள்ளி மாவட்டம் உன்னியூருக்கும் கரூர் மாவட்டம் நெரூருக்கும் இடையே காவேரி ஆற்றின் குறுக்கே ரூ.92.38 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பாலம் காட்டுப்புத்தூர் உன்னியூர் சாலையில் துவங்கி கரூர் நெரூர் சாலையில் முடிவடைகிறது. இப்பாலம் நீளம் 192.00 மீட்டர் மற்றும் அகலம் 12.90 மீட்டர் அளவில் கட்டப்படுகிறது. 26 கண்களுடன் 42மீ அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. தற்சமயம் உன்னியூர் தொட்டியம் காட்டுப்புத்தூர் வலையப்பட்டி மற்றும் அதை சார்ந்த கிராமம், எழுர்பட்டி காடுவெட்டி, மணமேடு கிராம மக்கள் கரூருக்கு செல்ல தற்சமயம் 10கி.மீ தொலைவில் காவேரி ஆற்றில் உள்ள பாலத்திலோ அல்லது 10 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றில் உள்ள மோகனூரில் உள்ள பாலத்திலோ சென்று வரும் நிலை உள்ளது. மேலும் நெரூர் திருமுக்கூடலூர் சோமூர், பஞ்சமாதேவி, முனியப்பனூர் கிராம மக்கள் 12 கிமீ தூரம் மோகனூர் பாலத்தின் வழியாக முசிறி தொட்டியம் சென்று வேண்டியுள்ளது. இப்பாலம் கட்டப்பட்டதால் 20 கி.மீ தூரம். சுற்றி வரவேண்டிய தூரம் குறைகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக 90% கட்டுமான பணிகள் முடிவுற்றது.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.5.93கோடி மதிப்பீட்டில் 4.59ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அறிவியல்பூங்கா கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
உட்கட்டமைப்பு வசதிகள் திட்டத்தின் கீழ் மண்டலம் 4 . திருமாநிலையூரில் ரூ.40.கோடி மதிப்பிட்டில் 12.14 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. உணவு விடுதி, பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணிகள் காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, டிக்கெட் கவுன்டர், காவல் துறை அறை, கடைகள், கழிப்பறைகள், மழைநீர் வடிகால், பேருந்துகள் நிறுத்துமிடம், ஏடிஎம் மையம், உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணிகள் அனைத்தும் தரமாகவும் விரைவாகவும் முடிக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவர்களுடைய திருக்கரங்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறந்து வைக்க உள்ளார்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி ஆணையர் சுதா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகானந்தம், உதவி கோட்டப் பொறியாளர் கோமதி, ஆர்டிஓ முகமது பைசல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.