ஜூன்.3.
கரூர் எம்பி. தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நாளை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.
ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி தேர்தல் பொதுப் பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தலைமையில், தேர்தல் அதிகாரி மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல்முன்னிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதேர்தல் பொதுப் பார்வையாளர் பேசுகையில்,
கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த (19.04.2024) அன்று 1,070 வாக்குபதிவு மையங்களில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணும் பணி நாளை (04.06.2024) செவ்வாய்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் துவங்கப்படவுள்ளது. கரூர் எம்.பி. தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் 358 அரசு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் 804 காவல் துறையினர் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு காவல்துறையினரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் எம்.பி. தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 20 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடி, 14 மேஜைகளில் 19 சுற்றுகள், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி 253 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 19 சுற்றுகள். மணப்பாறை சட்டமன்ற தொகுதி 324 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 24 சுற்றுகள், விராலிமலை சட்டமன்ற தொகுதி 255 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 19 சுற்றுகள். வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 309 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 23 சுற்றுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 7.708 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தபால் வாக்குகள் அனைத்தும் தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும்.
மேலும் தபால் வாக்குகள் எண்ணுவதற்கென 8மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேஜைக்கும் 1 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர். 2 வாக்குகள் எண்ணும் உதவியாளர்கள், நுண்பார்வையாளர் என தலா 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மேஜைக்கும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தலா 1 முகவர் நியமித்துக்கொள்ளலாம். ஒரு சுற்றுக்கு ஒவ்வொரு மேஜைக்கும் தலா 500 தபால் வாக்குகள் வழங்கப்பட்டு இரண்டு சுற்றுகளாக எண்ணப்படும்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைப்பேசி எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ள எந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அலுவலர்கள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கையில் படிவங்களை முறையாக ஆய்வு செய்வது, முறையாக பூர்த்தி செய்திடவும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி பணியாற்றிடவும் இப்பயிற்சியில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
முன்னதாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையாளர்- கலெக்டர் தங்கவேல், பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரூர் மாவட்ட எஸ்.பி. முனைவர் பிரபாகர், டி.ஆர்.ஓ. கண்ணன், தேர்தல் அலுவலர் சையது காதர் உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.