ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இமாச்சல் பிரதேசம் தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே பஞ்சாப் அணிகள் இன்று விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 43 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் 32 ரன்கள் மற்றும் டேரில் மிட்செல் 30 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் ராகுல் சஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட், அர்ஷ்தீப் 2 மற்றும் சாம் கரண் 1 விக்கெட் வீழ்த்தினர்.. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. பிர்ப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 2-வது ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளை அந்த ஓவரில் வீழ்த்தினார். பேர்ஸ்டோ மற்றும் ரூசோ என இருவரையும் போல்ட் ஆக்கினார். பவர்பிளே ஓவர்கள் முடிவின்போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப் கிங்ஸ்.
20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த ஷஷாங் சிங் விக்கெட்டை 8-வது ஓவரில் மிட்செல் சான்ட்னர் கைப்பற்றினார். அடுத்த ஓவரில் பிரப்சிம்ரன் சிங்கை வீழ்த்தி ஜடேஜா வெற்றிக்கு பாதை அமைத்தார். ஜிதேஷ் சர்மா டக் அவுட் ஆனார். அவரை சிமர்ஜித் சிங் வீழ்த்தினார். சி.எஸ்.கே அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் அணி திணறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் ஜடேஜா, 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். தேஷ்பாண்டே மற்றும் சிமர்ஜித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றிக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், இரண்டாம் இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் உள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நான்காம் இடத்தில் உள்ளது.