மே.25.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அடுத்த அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
முதலில் ஆடிய எஸ்.ஆர்.எச். அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் விரட்டியது. ஜெய்ஸ்வால் மற்றும் டாம் ஜோடி களம் இறங்கியது. 16 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்த நிலையில் டாம் ஆட்டமிழந்தார். அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் வெளியேற்றினார்.எனினும் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளாசினார். 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஷாபாஸ் அகமது சூழலில் அவுட் ஆனார். தொடர்ந்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், அஷ்வின், ஹெட்மயர், பவல் ஆகியோர் ஆட்டமிழந்தனர். துருவ் ஜுரல், 35 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 36 ரன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவுடன் மோதுகிறது.
ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஷாபாஸ் அகமது (3) மற்றும் அபிஷேக் சர்மா (2) விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இருவரும் நான்கு ஓவர்கள் வீசி முறையே 23 மற்றும் 24 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தனர். அந்த அணியின் பீல்டிங் செயல்பாடும் அபாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.