டிச.10.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (9.1.2025) சென்னை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி, பணிக்காலத்தின்போது உயிரிழந்த 311 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாநில அரசு பதவியேற்ற 7.5.2021 முதல் இதுவரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு பதவிகளுக்கான 2,420 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று வழங்கப்படும் 311 பணி நியமன ஆணைகள் சேர்த்து மொத்தம் 2,731 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் முதல் முறையாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய கைபேசி செயலி புதுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி வாயிலாக, மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் /குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இச்செயலி மூலம் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள்/ கருணை ஓய்வூதியதாரர்கள் தங்களது மருத்துவ காப்பீட்டு அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதாந்திர ஓய்வூதிய விவரம், வருவாயின் ஓய்வூதிய அட்டவணை, வருமான வரி செலுத்துவதற்கான படிவம் 16 பதிவிறக்கம் மற்றும் அனைத்து பயனுள்ள தகவல்களும் இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெற ஆதார் எண்ணை e-KYC வாயிலாக இச்செயலி மூலம் எளிதாக பதிவு செய்யலாம்.
இந்த செயலி மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் ஒரு இலட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். வாரிய ஓய்வூதியதாரர்கள் எளிதில் பயன்பெறும் வகையிலான இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தி, மூன்று ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தயாநிதி மாறன் எம்.பி., எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பீலா வெங்கடேசன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் / மேலாண்மை இயக்குநர் நந்தகுமார், தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் இந்திராணி, இயக்குனர் (பகிர்மானம்) மஸ்கர்னஸ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.