ஜூன்.29.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் காவல்-தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது-
விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகளைப் பொறுத்தவரை பரந்தாமன் அவர்கள் சென்னை மாநகரில் காவலர் குடியிருப்புகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் சிறப்புப் பழுதுபார்க்கும் பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் 40 கோடி ரூபாய் இந்த ஆண்டு முதல் 50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு அப்பணிகள் மேற்கொள்ளப்படும் (மேசையைத் தட்டும் ஒலி,)
சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஐயாஹிருல்லா அவர்களும், சின்னதுரை அவர்களும் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் காவல் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் கடவுச் சீட்டு மற்றும் தடையில்லாச் சான்று போன்றவைகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இது போன்ற பல ஆயிரம் வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மீதமிருக்கும் வழக்குகள் குறித்தும் உரிய தரவுகள் பெற்று திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களை அறியுறுத்தியிருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
அருமைச் சகோதரர். சிந்தனைச் செல்வன் அவர்கள் பேசும்போது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் ஒரு புதிய தீயணைப்பு நிலையம் அமைத்து தரக் கோரினார். கோவளத்தில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
பா.ம.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பணி செய்த காவலர்களுக்கு தேர்தல் பணிப்படி வழங்க கோரிக்கை விடுத்தார். காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களிடம் கருத்துரு பெற்று விரைவில் தேர்தல் பணிப்படி வழங்கப்படும்.
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தக் கூட்டத்தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு எனக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது. ஆக்கப்பூர்வமானவிவாதங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி) அந்த பதிலைக் கேட்பதற்குத்தான் அதிமுக தயாராக இல்லை. ஒருபுறம் தேர்தல் தோல்வி மறுபுறம் சொந்தக் கட்சியில் நெருக்கடி என இரண்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அதில் இருந்து தப்பிப்பதற்காக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தியது அதிமுக. நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எதிர்க்கட்சியினர் இந்த அவையில் எவ்வளவு நேரம் பேசியுள்ளார்கள் என்பதையும் அதிமுக ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு ஆட்சிகளின் ஜனநாயகப் பண்பும் தெரியும் புரியும்!
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ஆசிரியருக்கே உரிய கண்டிப்புடனும் தெளிந்த அறிவுக்கூர்மையுடனும் அதே நேரத்தில் சுவைபடவும் இந்த அவையை நடத்திச் செல்லும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி).
இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் 100 அறிவிப்புகள் உள்ளன. அதில் சிலவற்றை மட்டும் இப்போது அறிவிக்க விரும்புகிறேன். மீதமுள்ள அறிவிப்புகளை நான் படித்ததாகக் கருதி அவைக்குறிப்பில் சேர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை ஆதமங்கலம்புதூர் திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
அவை முன்னவர் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர், பேரணாம்பட்டில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். அது நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும்.
கொளத்தூர் கேளம்பாக்கம் செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல்ஆணையரகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். கோவை பொள்ளாச்சி, திருப்பூர் நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.
◇ தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ உடலுறுப்பு இழப்போ காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும் காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும் மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலயில் வழங்கப்படும். ◇ ஏரல் கருமத்தம்பட்டி மடத்துக்குளம் கோவளம் படப்பை திருநெல்வேலி மாநகரம் புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும்.
சமயபுரம் மேடவாக்கம் பெரம்பலூர் தியாகதுருகம் நீடாமங்கலம் கொளத்தூர் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.( மேசையைத் தட்டும் ஒலி).
அது மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களை சார்ந்துள்ள தாய் தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்திட வேண்டுமென்று காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று. தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி) .
மேலும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும் தேவைப்படும் நெறிமுறைகளை வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே எங்களது இலக்கு மிகப்பெரியது எங்களது கொள்கை மிகமிகப் பெரியது. எனவே எங்களது பயணமும் மிகமிக நீண்டது (மேசையைத் தட்டும் ஒலி.) நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை பேரறிஞர் அண்ணாவின் பாணியில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் செயல்வேகத்தோடு கொண்டு செலுத்தி வருகிறேன்.
எங்களது இலக்கில் நாங்கள் வெல்வோம்! வென்று கொண்டே இருப்போம்! வென்று கொண்டே இருப்போம்! என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).