மார்ச்.21.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் முன்பு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆஜரானார்.
மூன்றரை மணிநேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். 78 கேள்விகள் கேட்கப்பட்டது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கோரியவர் ஓ.பிஎ.எஸ். ஆனால் ஆணையத்தில் எதுவும் தெரியாது என்று கூறி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.அவரது பதில்கள் –
2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் எனக்கு தெரியாது. சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டேன், மறுநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்று அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்தேன்; அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கும் கோப்பில் நானும் கையெழுத்திட்டேன்.
மருத்துவமனையில் ஜெயலலிதா நடத்திய காவிரி தொடர்பான கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காவிரி கூட்டம் தொடர்பாக அறிக்கை வந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். ஜெயலலிதா காவிரி கூட்டம் பற்றி தமக்கு டிக்டேட் செய்ததாக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் கூறினார். அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவிக்களை அகற்ற நான் உத்தரவு இடவில்லை. தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதல்வராக நான் பொறுப்பேற்றதில் இருந்து நான் பேசியது சரியானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் திரும்பி போனது குறித்து எனக்கு தகவல் தெரியாது. என கூறியுள்ளார்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.