டிச.12..
கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமும் இணைந்து 16.12.2024 முதல் 05.01.2025 முடிய 21 நாட்களுக்கு அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி 6வது சுற்று போடும் பணி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 06.01.2025 முதல் 20.01.2025 முடிய விடுபட்ட கால்நடைகளுக்கு மேற்படி தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
கோமாரி நோய் இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோயாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றம் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர், சாணம், பால் மற்றும் பண்ணை கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது.
கோமாரி நோயினால் மாடுகளில் சினைப்பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பிறக்கம், எருதுகளின் வேலைத்திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் பொருளாதார இழப்பு நேரிடுகிறது.
இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் 16.12.2024 முதல் 20.01.2025 முடிய அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் கால்நடை நிலையங்களின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் 75 குழுக்கள் மூலம் 3 மாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். மேலும், இதுகுறித்து முன்கூட்டியே தக்க விளம்பரம் செய்து தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும் எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நாளில் தவறாது கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.