பிப்.12.
கரூர் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். கொள்கைபரப்பு செயலாளர் எம் பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை ஆதரித்து பேசியது-
நாங்கள் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தினோம். நான் முதல்வராக இருந்தபோது காவல் துறைக்கான விருதை மத்திய அரசு வழங்கியது. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது . ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது. காவல்துறை ஏவல் துறையாக இருக்கக் கூடாது. இது தொடர்ந்தால் இன்னும் 24 அமாவாசைதான் காத்திருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது ஆட்சி மாறும் . காட்சிகள் மாறும். அதிமுகவிலிருந்து தலைவர்கள் வேண்டுமானால் போகலாமே தவிர தொண்டர்கள் இங்கு நிலைத்து நிற்பார்கள். சாதாரண தொண்டன் இயக்கத்திற்கு சிறப்பாக உழைத்தால் உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
திமுக அரசை தூக்கி பிடித்து நிறுத்தியது ஊடகமும் பத்திரிகைகள்தான். இல்லாவிட்டால் காணாமல் போயிருக்கும். எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் தோற்றுவிட்டார். ஆட்சிக்கு வரவில்லை என்ற விரக்தியில் பேசுகிறார் என மு.க ஸ்டாலின் கூறுகிறார் . அது சரியல்ல. எனக்கு பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. என்றார்.