ஆக.28.
கரூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கரூர் வந்தார்.
கரூர் ஹேமலா ஓட்டலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியது-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். அவர் எனது தம்பி. அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு கடந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சி காலத்தில் நடந்தது. இதுவரை இந்த வழக்கை விசாரிக்காதது ஏன்? எதற்காக இவ்வளவு நாள் காலதாமதம் செய்தீர்கள்.?. நேர்மையானவர்களாக இருந்திருந்தால் அப்போதே அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? . தற்போது அமலாக்கத்துறை என்பது அமலாக்கத்துறை அல்ல, அமல் , மாமூல் துறையாக உள்ளது. ஐடி 1500 கோடி ரூபாய் பறிமுதல் செய்தால் 10% பெனால்டி போடுவார்கள். அதன்பிறகு எங்களுக்கு எவ்வளவு என கேட்கும் நிலை தான் உள்ளது. சேகர் ரெட்டி 2000 ரூபாய் புதிய நோட்டுக்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறையால் தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லை.
பொன்முடி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மணல் எடுத்ததாக வழக்கு போடும் அமலாக்கத்துறை மணல் எடுத்த சேகர் ரெட்டி மீது என்ன நடவடிக்கை எடுத்தது. நடவடிக்கை எடுப்பவன் நேர்மையானவனாக இருக்க வேண்டும். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே நக்கீரன் கூறியது போல் செயல்பட வேண்டும்.
என் கட்சியில் சேர்ந்தால் என் கூட்டணி இருந்தால் நடவடிக்கை இல்லை என்பது சரியல்ல. அண்ணாமலையே அதிமுகவின் ஊழலைப் பற்றி பேசுவதில்லை. குற்றவாளிகள் எல்லாம் கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கட்சியில் சேர்ந்தால் குற்றமில்லை என்றாகி விடுமா?
கொடநாடு முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகம். தனி வழித்தடத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக் கூடிய பகுதியாகும். அந்த இடத்தில் எப்படி மின்சாரம் தடைபட்டது.? எப்படி கொலை நடந்தது? அவரது கார் ஓட்டுநரின் சகோதரர் கொடுத்த பேட்டி காலதாமதம் என்றாலும் அது வரவேற்கத்தக்கது.
இவரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவருக்கு கொலை மிரட்டல் விட்டதாக அவரே தெரிவித்து இருக்கிறார். துணிந்து அவர் சொல்வதை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் 14 பேர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் போல கோடநாடு கொலை சம்பவம் ஆகிவிடக்கூடாது என்றார். தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுட உத்தரவிட்டது யார் என இதுவரை கூற மறுக்கின்றனர்.
திமுக, மத்திய அரசுடன் கடந்த 18 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தது அப்போது ஏன் கச்சத்தீவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.
என்எல்சி நிறுவனத்தில் ஒரு தமிழர் கூட பணியில் இல்லை. இவர்கள் தமிழ்நாட்டில் இடம் வாங்கிக் கொண்டு விரிவாக்கம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு ஏன் நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சனையில் தேசியக் கட்சிகளான பிஜேபியும், காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளாக நடந்து கொள்கிறது.
தமிழகத்தில் உள்ள திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என கூறி அவர்களை வெளியேற்றட்டும். அப்படி வெளியேற்றிவிட்டால் அவர்களுக்கு எம்பி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்யும் எனது தம்பிகளை சமாதானப்படுத்திக் கொள்கிறேன் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து சீமான் மீது புகார் அளித்து வருவது குறித்து கேட்டபோது, அவர் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து தான் வருகிறார் வைக்கட்டும் என்றார்.