ஏப்21.
சட்டமன்ற பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பேசினார். தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என இதுவரை எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கவில்லை. கட்சித் தலைவி பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவத்தில் மூடி மறைத்தது, பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது போன்ற சரமாரி கேள்விகளை எழுப்பினார். முதலமைச்சர் பேசியது-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்?அதை மட்டும் எதிர்க்கட்சி தலைவர் ஏன் சொல்லவே மறுக்கிறார்? முதலமைச்சராக இருந்த போதும் சொல்லவில்லை, இப்போதும் சொல்லவில்லை.
கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும் போது இந்த ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளது. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோட்டையில் அமர்ந்து திட்டங்களை தீட்டினால் போதாது. மக்களுக்கு நெருக்கமாகச் சென்று திட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக “களஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை தொடங்கினோம். ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் குறித்து மக்களிடம் ஆசையை தூண்டி இது போன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகையை நிதிநிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சுகளில் முரண்பாடு, ஏன் இந்த தடுமாற்றம்;
கொடநாடு கொலை, கொள்ளையை அப்போதைய முதலமைச்சரே மறைக்க முற்படும்போது திமுக எப்படி அமைதியாக இருக்க முடியும்? சிபிசிஐடி விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும்.
கோவையில் கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். 3 நாளில் இது போன்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசு தான்.
கோவை பாதுகாப்பை கருதி பல்வேறு பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கவும், கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டன.
மத ரீதியிலான மோதல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சாதிச் சண்டை பூசல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது.
1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள். மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர். மக்களுக்கு நேரடியாக, தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை, ஏமாற்றவும் முடியவில்லை.
தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்கள் மனங்களையும் வென்றிருக்கிறோம். இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக திகழ்கிறது;
மக்கள் நலன், கொள்கை இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம் என்றார்.