மார்ச்.27.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் விரிவான கலந்தாய்வு மேற்கொண்டார்.
தற்போதைய உற்பத்தித் திறன், உச்ச மற்றும் குறைவான மின் தேவை நேரங்களில் சுழற்சி மாறுகிறது உற்பத்தி நிலைகள் (Peak vs Off-Peak Generation), மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (மின் கொள்முதல் ஒப்பந்தம்), மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மாநிலத்தின் மின் தேவையினை பொறுத்தமட்டில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உச்சபட்ச மின்தேவை முறையே 17,279 மெகாவாட் மற்றும் 18,584 மெகாவாட்டை எட்டியது. இந்த உச்சபட்ச மின் தேவையானது எந்த மின்தடையுமின்றி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சபட்ச மின்தேவை முறையே 19,500 மெகாவாட், 21,943 மெகாவாட் மற்றும் 22,079 மெகாவாட் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் (அனல், புனல், காற்றாலை, சூரியசக்தி மற்றும் எரிவாயு) முழுத்திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்பாராதவிதமாக அனல் மின் நிலையங்களில் பழுது ஏற்படும் போது கூடுதலாக கவனமாக கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுடன் மின்பரி மாற்றத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரம் மற்றும் குறுகியகால ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தையும் ஒருங்கிணைத்து மின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோடைகால மின் தேவையை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், 2024-25 ஆம் நிதியாண்டில் இதுவரை 400 கி.வோ. திறன் உள்ளிட்ட 23 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், 93 உயரழுத்த மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்பட்டு, மின்பளுவை சீராக்குவதற்காக 148 புதிய மின்னூட்டிகள் நிறுவப்பட்டு இயக்கத்தில் உள்ளன. அதிக சுமையுள்ள 3,983 மின்மாற்றிகள், குறை மின்னழுத்த பிரச்சினை உள்ள 2,944 மின்மாற்றிகள் மற்றும் மேம்பாட்டுப் பிரச்சினை அடிப்படையில் 19,899 மின்மாற்றிகள் என மொத்தம் 17,826 புதிய மின்மாற்றிகள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரப்பட்டுள்ளன.
இருப்பில் தளவாடப் பொருட்கள்!
கோடைகாலத்தை எதிர்கொள்ளும் வகையில் 11,922 கி.மீ. நீளமுள்ள மின்கம்பிகள், 1,314 மின்மாற்றிகள், 1,895 கி.மீ. நீளமுள்ள புதைவட கம்பிகள் மற்றும் 2,250 பில்லர் பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய தளவாடப் பொருட்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தற்பொழுது +2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் சூழலில் மாணவர்களின் தேர்வு நேரத்தைக் கருத்தில் கொண்டு, கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் வகையிலும், அனைத்து துணை மின் நிலையங்களிலும் வரும் 30.04.2025 வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என தலைமைப் பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், இரவு நேரங்களில் மின் தடங்கல் ஏற்பட்டால், அதை உடனுக்குடன் சரிசெய்ய தேவையான பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மின் தடங்கல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் மின்னகம் வழியாக பெறப்படும் குறைகள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்தி, உடனுக்குடன் சரிசெய்ய அலுவலர்களுக்கு அமைச்சர் வலியுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில்,மேலாண்மை இயக்குநர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்துமேலாண்மை இயக்குநர்கள், இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.