பிப்.1.
கரூர் மாவட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி கேமராக்கள் மூலம் விதிமீறல் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்க நவீன கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு கரூரில் கூறினார்.
கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக குற்றத் தடுப்பு பணிக்காக அதிநவீன தானியங்கி கேமராக்கள் அமைக்கப்படுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு உதவிடும் வகையில் கரூர் மாநகரம் மற்றும் மாவட்ட முழுவதும் இயங்கி வரும் சோதனைச் சாவடிகள், முக்கிய ஊர்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகள் ஆகிய இடங்களில் வாகனங்களின் பதிவு எண் மற்றும் விவரங்களை தெரிவிக்க கூடிய 34 அதிநவீன தானியங்கி கேமராக்கள், கரூர் நகரப் பகுதிகளில் 64 கேமராக்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் 40 கேமராக்கள் பொருத்தப்பட்டு, மொத்தம் 138 கேமராக்கள் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் வாகனங்களை முழுமையாக கண்காணித்து விதிமீறல் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், வாகன விபத்துக்கள் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்..