ஏப்.4.
உலக ஆட்டிச விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளான சுமார் 90 குழந்தைகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இக்கல்லூரியின் குழந்தைகள் நலத்துறையின் கீழ் செயல்திறன் பயிற்சி, திறன் மேம்பாடு பயிற்சி உள்ளிட்ட தேவையான அனைத்து பயிற்சிகளும்,மருத்துவ சிகிச்சையும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் யங் இந்தியன்ஸ் அமைப்பின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியமர்த்தப்பட்டு யங் இந்தியன்ஸ் அமைப்பின் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் டிஎன்பிஎல் நிறுவனம் மூலம் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க தேவையான உபகரணங்கள் வாங்கிட நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். லோகநாயகி தலைமை வகித்தார். ஆட்டிசம் பாதிப்பிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித தயக்கம் இன்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்து இலவச சிகிச்சை மற்றும் தொடர் பயிற்சியினை பெற்று மற்ற குழந்தைகளைப் போல் இவர்களும் செயல்பட குழந்தைகளின் பெற்றோர்கள் முன்வர வேண்டுமென முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள் இரண்டு வயதிலிருந்து உரிய பயிற்சி மேற்கொண்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதால் இக் குழந்தைகளை விடுதலின்றி உரிய காலத்தில் சிகிச்சைக்கு அளித்த வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ராஜா, துணை முதல்வர் பொறுப்பு ராமேஸ்வரி, குழந்தைகள் நலத்துறை மருத்துவர்கள், டி என் பி எல் நிறுவனத்தின் முதல் நிலை மேலாளர் சிவக்குமார், யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் லோகேஷ், ரங்கா பாலிமர் ஜாய் ஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.