டிச.31.
சென்னை வண்டலூர் அருகில்
கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக 88.52 ஏக்கரில் இந்த பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக கடந்த 2018-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்தகிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.திமுக ஆட்சியில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அண்மையில் வெள்ளோட்டமும் விடப்பட்டது. இப்பேருந்து முனையம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இதில்முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பேருந்து முனையத்தை திறந்துவைத்தார்.
என்ன வசதிகள்
இப்பேருந்து முனையம் 6 லட்சம்சதுரஅடி பரப்பளவில் 2 தரைகீழ்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும். 28.25 ஏக்கர்பரப்பளவில் வாகன நிறுத்துமிடம்,கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
ஓய்வறைகள்: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பேருந்து நடைமேடைகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ‘க்யூஆர்’ கோடு மூலம் டிக்கெட்கள் வழங்கும் வசதி, 2 அடித்தளங்களில் 324 கார்கள், 2,769 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி ஆகியவை உள்ளன.
பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள் உள்ளது. இலவச தனியார்மருத்துவமனையும் அமைக்கப்பட் டுள்ளது.
விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, செல்வம், எம்எல்ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி, போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து, பேருந்து நிலைய நுழைவாயிலில் முன்னாள்முதல்வர் கருணாநிதி சிலையைதிறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள், அரசு போக்குவரத்துப் பேருந்துகள், மாநகர போக்குவரத்ததினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.