ஜூலை.5.
அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் கரூர் நகர காவல் நிலைய போலீசார் 7 நபர்கள் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்ய கூடும் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடந்த 22 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனிடையே வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் தன்னை அடித்து, உதைத்து போலி ஆவணங்கள் பத்திரப் பதிவு செய்து பறித்துக் கொண்டதாகவும் அதை மீட்டுத் தரக்கோரி வாங்கல் நிலையத்தில் பிரகாஷ் என்பவர் புகார் மனு அளித்தார்.
இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர்கள் மீது சிலர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்று திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சோதனை நடத்தினர். பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ், தோட்டக்குறிச்சி பேரூர்அதிமுக இளைஞரணி செயலாளர் மற்றும் கவுண்டம்பட்டி புதூர் ஆதரவாளர் வீடுகளில் சோதனை நடத்தினர்.