தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பத்தூர். கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சமூக அளவிலான கருப்பைவாய், மார்பக மற்றும் வாய்புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பொதுவான புற்று நோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஆகிய மூன்று புற்று நோய்களையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கி உயிரிழப்புகளை தவிர்த்து, அவர்களின் வாழ்நாளை நீட்டித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு மக்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி செயல்படுத்தப்பட உள்ளது.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கூறிய புற்றுநோய்களுக்கான விழிப்புணர்வு வழங்கி மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்புகளை அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும்.
இதில் கரூர் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். 7 மருத்துவமனைகள் மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி 45 மையங்களில் புற்றுநோய்க்கான அரசு மருத்துவமனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக 101 கிராமப்புற சுகாதார நலவாழ்வு மையங்கள் மற்றும் 4 நகர்புற நலவாழ்வு மையங்கள் உட்பட 105 மையங்களில் இச்சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு இலவச பரிசோதனை வசதிகள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வழங்கப்பட உள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண். பெண் இருபாலருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை வாய்புற்றுநோய் பரிசோதனையும் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மார்பக மற்றும் கருப்பை வாய்புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்படின், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள்.
பொது மக்கள் பணிபுரியும் இடங்களான அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சார் நிறுவனங்களில் மருத்துவக்குழுவினரை கொண்டும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இலவச புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.