ஜூன்.7.
கரூர் மாவட்டத்தில் கோடை பருவ சாகுபடி தற்போது இருப்பில் உள்ள நீரினை பயன்படுத்தி நடைபெற்று வருகிறது. எனவே, நெல், சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க எற்பாடுகள் செய்யப்பட்டு விநியோகம் நடைபெறுகிறது. தற்போது மாவட்டத்தில் யூரியா 1165 மெ.டன், டிஏபி -504 மெ.டனி, பொட்டாஷ்- 715 மெடன், காம்ப்ளக்ஸ்-1324 பெட்டன், சூப்பர் பாஸ்பேட் 130 மெ.டன் என மொத்தம் 3838 மெ.டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
உர விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்திட வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது. உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையினை கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் நாள்தோறும் பராமரிக்க வேண்டும். உரமூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும்.
விவசாயிகள் மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் உரச்செலவை குறைக்கலாம். உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்யப்படுவதால் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும். மேலும் உரம் குறித்த புகார்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். திடீர் ஆய்வின்போது மேற்படி வழிமுறைகள் பின்பற்றாமல் இருந்தாலோ, அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை அல்லது உரம் கடத்தலில் ஈடுபட்டாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர், மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.