டிச.3.
கரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி முழு வீச்சில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு விநியோகம் நடைபெறுகிறது. தற்போது கரூர் மாவட்டத்தில் யூரியா 1675 மெடன், டிஏபி-324 மெடன், பொட்டாஷ்-1327 டன், காம்ப்ளகஸ் உரங்கள் 1354 டன், மற்றும் சூப்பர் பாஸ்பேட் 410 மெ.டன் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தனியார் உர விற்பனையாளர்கள் அனைவரும் உர விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்திட வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது. விற்பனை உர உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு ஆணை. 1985ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையினை கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் நாள் தோறும் பராமரிக்க வேண்டும். உரமூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். மேலும், உரம் குறித்த புகார்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட அளவிலான குழுக்கள் உர விற்பனை நிலையங்களை திடீர் ஆய்வின்போது மேற்படி வழிமுறைகள் பின்பற்றாமல் இருந்தாவோ, அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி விற்பனை அல்லது உரம் கடத்தலில் ஈடுபட்டாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.