பிப்.13.
கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் இருந்து இரண்டு பேர் இன்று அதிகாலை இருப்புப் பாதையை கடந்து நடை மேடைக்கு வந்து கொண்டிருந்தனர். மாயனூர் ரயில் நிலையம் வளைவான பகுதியில் அமைந்துள்ளது. மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற ரயில் வந்ததை கவனிக்காமல் இருவரும் சென்றபோது ரயிலில் அடிபட்டனர். ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிர் இழந்தனர். அவ்வழியாகச் சென்றவர்கள் இதை பார்த்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ரயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர்கள் பெருமாள் (50 )போதும் பொண்ணு ( 35) என்ற விபரம் தெரியவந்தது. இருவரும் ஈரோடு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்ததால் ரயில் மோதி உடல் சிதறி இறந்தனர். கரூர் ரயில்வே போலீசார் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில்வே போலீஸ் டிஎஸ்பி. பிரபாகரன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், இருப்பு பாதையை கடக்க உரிய வழியை பின்பற்றாமல் செல்வது, இயற்கை உபாதைகளை கழிப்பது போன்றவற்றினாலும், தற்கொலை எண்ணத்தோடும் பலர் உயிரிழந்து விடுகின்றனர். எனவே பொதுமக்களும் தண்டவாளத்தின் அருகே வசிப்பவர்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 34 பேர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர் . இதில் 15 பேர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ரயில் முன் பாய்ந்து இறந்தனர். இது போன்ற செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.