கரூர்.ஜன.12.
காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படியும், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அறிவுரைப்படியும், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் மேற்பார்வையில் வார இறுதி நாட்களிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கரூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வாகன சோதனை செய்யப்பட்டதில், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில், பசுபதிபாளையம் வட்ட ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த யுவராஜ், 38/25, கிழக்கு கருப்பகவுண்டன் புதூர், சுங்ககேட், கரூர் (அகில பாரத மக்கள் கட்சி - கரூர் மாவட்ட தலைவர்) என்பவருடைய இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட வாள் ஒன்று அவரது வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு, பின்பு அவரை அழைத்துக்கொண்டு அவரது வீட்டை சோதனை செய்ததில் அருவாள் - 2, சூரிக்கத்தி -2, வாள் - 2, நாட்டுத்துப்பாக்கி - 1 ஆகியவற்றை கைப்பற்றி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவர்மீது ஏற்கனவே கரூர் மாவட்டம், கரூர் நகர காவல் நிலையத்திலும் மற்றும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இதேபோல் அன்று மாலை பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியூர் முடக்குசாலையில் கரூர் நகர டிஎஸ்பி தலைமையில், பசுபதிபாளையம் சர்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் ஆளினர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக TATA Safari காரில் வந்த ரவிச்சந்திரன், P.வெள்ளாளப்பட்டி, புலியூர், கரூர் (அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் வீர பறையர் பேரவை நிறுவனர்) என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் பட்டா கத்தி ஒன்று அவரது வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு, பின்பு அவரை அழைத்துக்கொண்டு அவரது வீட்டை சோதனை செய்ததில் பட்டாகத்தி - 1, சூரிக்கத்தி -04, வீச்சருவாள் - 1, நாட்டுத்துப்பாக்கி - 1, மான் கொம்பு - 1, செய்தி கனல் பத்திரிக்கை நிருபர் என அடையாள அட்டை - 1, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் நலவாரிய அடையாள அட்டை -1, APF நீலநிற பேட்ஜ் -1 மற்றும் அவர் பயன்படுத்திய கார் ஆகியவற்றை கைப்பற்றி பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவர்மீது ஏற்கனவே கரூர் மாவட்டம், மதுரை மாநகரம், தள்ளாகுளம் காவல் நிலையம், திருச்சி மாநகரம், கோட்டை மற்றும் உறையூர் காவல் நிலையங்களில் 08 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
மேலும் கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதி சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்;ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.