ஜன.8.
கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கலெக்டர் பேசுகையில்,
தமிழ்நாடு பிராணிகள் வதை தடுப்புச்சட்டம் (ஜல்லிக்கட்டு) விதிகள் 2017- க்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் 2014 நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் காளையின் உரிமையாளர்கள் அதன் விவரங்களை நிகழ்ச்சிக்கு முன்னர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன்படி கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
காளைகள் இரண்டு வயதிற்கு மேற்பட்டதாகவும் 120 செமீக்கு மேல் இருக்க வேண்டும். பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், நல்ல உடல்நிலையை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். மாடுபிடி வீரர்களும் நிகழ்ச்சிக்கு முன்னர் மேற்கண்ட இணையத்தளத்தில் தங்கள் பெயர்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
காளைகளை ஜல்லிக்கட்டு விழாவிற்கு கொண்டு செல்லும் போது பாதுகாப்பான முறையில் விதிகளுக்கு உட்பட்டு கொண்டு செல்ல வேண்டும். காளைகளுக்கு ஊக்க மருந்துகள் கொடுப்பதோ, கண்களில் மிளகாய் பொடி தூவுதல், கூரிய கருவிகள் கொண்டு துன்புறுத்துதல் மற்றும் ஊறுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
மேலும். மாடுகளின் கொம்புகளில் மாடுபிடி வீரர்களுக்கோ. பார்வையாளர்களுக்கோ பாதிப்பு ஏற்படாமல் கொம்புகளில் ரப்பர் காப்புகளை அணிவித்தல் வேண்டும். மாடுபிடி வீரர்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஊக்க மருந்தோ. போதை பொருட்களை உட்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்கிறார்களா என்பதையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் போது வருவாய்த்துறை. காவல்துறை, கால்நடை பராமரிப்பு, மருத்துவம் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீ, ஆர்டிஓ முகமதுபைசல், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) மரு. சாந்தி, டிஎஸ்பி அக்பர்கான். விழா குழுவினர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.