ஆக.4.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து கரூர் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில்,
இத்திட்டத்தின் மூலம் அனைத்து வகையான பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
“நலம் காக்கும் ஸ்டாலின்” பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை. எலும்பு முறிவு மருத்துவம், பேறு கால மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இதய நல மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம் கண் சிறப்பு மருத்துவம் காது மூக்கு. தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம் உணவியல் மருத்துவம். ஆகிய 17 சிறப்பு மருத்துவ சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் அனைத்து சிகிச்சைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும்.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் மொத்தம் 24 முகாம்களும், கரூர் மாநகராட்சியில் 3 முகாம்களும் என மொத்தம் 27 முகாம்கள் ஜீலை 2025 முதல் பிப்ரவரி 2026 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் மருத்துவ முகாம் நடத்தி நோயாளிகளை பரிசோதித்து சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை கண்டறிந்து, அவர்களும் பயனடைய மருத்துவக் குழு மூலம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.
இம்முகாமில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் வெ. கவிதா, துணை மேயர் சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.பி. கனகராஜ், அன்பரசு. இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் மரு செழியன், மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு .லோகநாயகி, மாநகராட்சி ஆணையர சுதா, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












